Showing posts with label ரங்கநாத மாமா. Show all posts
Showing posts with label ரங்கநாத மாமா. Show all posts

Wednesday, January 13, 2016

ரங்கநாத மாமா


ஸ்ரீ ரங்கநாதன்

(மறைவு 11-Sep-2013)

உந்தன் சிரித்த-முகம் வந்தே துயர்போக்கும்
மாந்தர் நொந்திடுங்கால் மருந்தாய் இதம்-சேர்க்கும்
சிந்தும் பேரன்பை உன்போல் யார்-தருவார்
மற்றோர் துடித்தரற்றும் மனத்தின் துயரம்-தன்னைத்
தனதாய் நினைத்து-நெய்போல் உருகிக் கனிந்து-சேவை
உலகில் புரியவேண்டி நடந்த ரங்கன்-உன்னை
துணையாய் ஆக்கிக்கொள்ள அழைத்தானோ கிடந்த-ரங்கன்
தனதாய்ப் பார்த்துக்கொள்ள நினைத்தானோ இமய-விடங்கன்
___________________________

நாட்கள் வேகமாக ஓடிக் கொண்டிருக்கின்றன…! கடந்த கால நிகழ்வின் நினைவுகளும் மறந்து கொண்டிருக்கின்றன…! ஆனால் சில நினைவுகள் மறைவதில்லை. யாருக்கும் சிறு வயதின் சில நினைவுகள் மறக்காமல் நம்முடன் வாழ்ந்து கொண்டே இருக்கும்.
  • தாய் தந்தையருடன் நமக்குள் நிகழ்ந்தவையும், என்றும் ஏக்கத்தைத் தருவதுமான பல நிகழ்வுகள்,
  • சகோதர சகோதரிகளுடன் நாம் அனுபவித்த சில விலை மதிப்பில்லாத கணங்கள், 
  • நண்பர்களுடன் கவலையின் சுவடு தெரியாமல் நாம் லூட்டி அடித்த கணங்கள்,
  • Mentor போலத் திகழ்ந்து நம்மை ஊக்குவித்த சில ஆசிரியர்களுன் செலவழித்த நெகிழ்வூட்டும் சில கணங்கள் ..
என இப்படிப் பல இறந்த கால நிகழ்வுகள் நம்முடன் என்றும் இறக்காமல் வாழ்ந்து கொண்டிருக்கும்..! அது போல என்னால் மறக்க இயலாத, மறக்க விரும்பாத கணங்களை வழங்கிய ஒரு relationship , திரு ரங்கநாத மாமாவுடன் எனக்கிருந்தது. 

என்னுடைய தினசரி “மார்னிங் வாக்”கின்போது போகும்போதோ , திருபும்போதோ ஒரு முறையாவது  ரங்கநாத மாமாவை அவர் வீட்டு வாசலிலோ , கோவில் வாசலிலோ சந்திப்பேன். அப்போது,எங்களிடையே  ஒருவருக்கொருவர் கையசைப்பின் மூலம் அன்புப் பரிமாற்றம் நிகழும். 

எப்போதாவது ஒரு முறை எங்களுக்கிடையே உரையாடல் நிகழும். அதில் அவராகத் துவங்கும் உரையாடல்களில் ஒரு அவசரம் தென்படும்.. Officeக்குக் கிளம்ப வேண்டியவனை நிறுத்தி வச்சு பேசறோமே என்கிற தவிப்பு தெரியும். அந்த தவிப்பை அவருக்கு கொடுக்கும் வண்ணமாக நம் நடப்பு இருக்கிறதே என்ற ஒரு தவிப்பு எனக்குள்ளும் இருக்கும். அந்த மாதிரியான கணங்களில் ரத்தினச் சுருக்கமாக அவர் என்னுடன் பகிர்ந்த கணங்களை, அவ்வப்போது நான் அசை போடுவதுண்டு. 

இன்றும் walking போகும்போதெல்லாம், அவர் வீட்டைக் கடந்து செல்லும்போது ,அவருக்கு மானசீகமாக நான் கைகூப்பி வணக்கம் சொல்லும்போது அவர் தன் கையை உயர்த்தி ஆசி வழங்குவது போன்ற ஒரு ப்ரம்மையை நான் உணர்வதுண்டு..! 

அவருடன் நான் பகிர்ந்து கொண்ட  ஒவ்வொரு கணமும், என் நினைவை விட்டு என்றென்றும் அகலாது...அது போலவே அவைகளை நினைவுகூர்ந்து அசை போடும்போது அவை மனதுக்குக் கொடுக்கும் கனமும் என் மனதை விட்டு அகலாது..!

ரங்கநாத மாமாவினுடைய எளிமை,ஆர்ப்பாட்டமில்லாமல் அவர் புரியும் உயர்ந்த சேவை மற்றும் எல்லா தரப்பினருடனும் எளிதாகக் கலந்து கொள்ளும் தன்மை எனப் பல விஷயங்கள் என்னை மட்டுமல்ல எல்லோரையும் கவர்ந்த ஒன்று

சமீபத்தில் அவர்கள் வீட்டில் பேசிக்கொண்டிருந்த போது மாமி வரைந்த சில ஓவியங்களையும் (Art work) , அதற்காக அவர் பெற்ற விருதுகளையும் காண முடிந்தது. அது போல மாமாவின் புதல்விகள் தன் தந்தையாரை நினைவு கூர்ந்து எழுதிய ஒரு கட்டுரையையும் படிக்கும் வாய்ப்பு கிட்டியது. மாமாவின் புதல்விகள் மற்றும் மாப்பிள்ளைகளின் நற் பண்பும், திறமும் ஆஸ்திக சமாஜம் மற்றும் Association நிகழ்ச்சிகளில் அவர்கள் பங்கு பெறும்போது பல சமயங்களில் வெளிப்பட நான் அறிந்ததுண்டு. யாவரும் அறிந்த ஒன்று.. !

ஆனால் ,மாமிக்கு இப்படி ஒரு Special talent இருப்பதோ அவர் சமஸ்க்ருதம், ஹிந்தி,சரித்திரம்,ஓவியம்  என பல Subject களில்  தேர்ந்த பாண்டித்யத்துடன் திகழ்ந்த ஒரு அவதானி  என்பதோ  அது வரையில் எனக்குத் தெரியாத விஷயம். ரங்கநாத மாமாவைப் போலவே , மாமியும் குடத்தில் இட்ட விளக்காய்த் திகழ்ந்தார்.

புலிக்கு புலிக்குட்டிகள்தான் பிறக்கும் (பிறந்த), என்பது போல, புலிக்கு வாழ்க்கைப் பட்டதும் ஒரு புலியாகத்தான் இருக்கமுடியுமே தவிர பூனையாக முடியாது என்று உணரும்போது , என்னுடைய ஆச்சர்யம் சற்று குறைந்தது . நெஞ்சத்தில் ஆச்சர்யம் காலி செய்த இடத்தைப் பிறகு admiration பிடித்துக் கொண்டது..!

மாமாவைப் பற்றி நினைவு கூரும் இவ்வேளையில்,
மாமியிடைய Art-work , அப்போதைய பிரதம மந்திரி திருமதி. இந்திரா காந்தி அம்மையாருடைய வாழ்த்து மடல் மற்றும் ரங்க நாத மாமாவின் புதல்விகளின் மலரும் நினைவுகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த ஆனந்தம் அடைகிறேன்..!


என்னுடைய இந்த நினைவு கூரலில் -
என்னுடன் சேர்ந்து கொள்பவர்கள்..!


       திருமதி. கமலா ரங்கநாதன்,
       புதல்விகள் திருமதிகள்.வித்யா ராமஸ்வாமி, ஜெயஸ்ரீ கண்ணன்
      (மாப்)பிள்ளைகள் திருவாளர்கள். ராமஸ்வாமி, கண்ணன்.
      பேரக்குழந்தைகள் தீபக்,ஸ்ம்ருதி,ஸ்ருதி


இதைக் கண்ணுற்று மகிழ்ந்து ஆசி கூறுபவர், என்றென்றும் என் நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கும்

    ரங்கநாத மாமா .. !
    ( தந்தை போன்ற ஒரு வாத்ஸல்யத்தோடு ரங்கநாத மாமா என்னுடன்
      பழகியதால் அவருக்கு திரு என்ற அடைமொழி கொடுத்து 
      ஒரு distanceஐ ஏற்படுத்திக்கொள்ள என்னால் முடியவில்லை )










Maami Honored by CMWA